சிவகங்கையின் முதல் மன்னர் சசி வர்மர் (1730 முதல் 1750) : கட்டய தேவன் ராமநாதபுரத்தை ஐந்தாக பிரித்து 3 பகுதிகளை தன்வசமும் 2 பகுதிகளை சசிவர்ம தேவருக்கும் வழங்கினான். பின்னர் சசிவர்மதேவர், ராஜா முத்து விஜய ரகுநாத பெரிய உடைய தேவர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.1750ம் ஆண்டு சசிவர்ம பெரிய உடைய தேவரின் மறைந்தார். அதன் பின்னர் அவரது மகன் முத்துவடுகபெரியஉடைய தேவர் சிவகங்கையின் 2வது மன்னரானார். அவரது மனைவி வேலுநாச்சியார் ஆட்சியிலும் பங்கேற்று நல்ல வழிகாட்டியாக திகழ்ந்தார். தாண்டவராய பிள்ளை என்பவர் அமைச்சராக இருந்தார்.பின்னர் ஆங்கிலேயர்கள், வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்து கொள்ள வசதியாக நவாப்களின் கட்டுப்பாட்டில் பணிபுரிய வற்புறுத்தினர். இதற்காக 2 முக்கியமாக செயல்களை ஆங்கிலேயர்கள் செய்தனர்.1722ம் ஆண்டு சிவகங்கையின் கிழக்கு பகுதியில் இருந்து ஜோசப் ஸ்மித் தலைமையிலும், மேற்கிலிருந்து பென்ஜார் தலைமையிலும் படையெடுத்து வந்தனர். இந்த போரில் முத்துவடுக தேவர் உட்பட பல வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். வேலு நாச்சியார், அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் அமைச்சர் தாண்டவராய பிள்ளை ஆகியோர் திண்டுக்கல் விருப்பாச்சி பகுதிக்கு தப்பி சென்று மருது பாண்டியர்களுடன் இணைந்தனர். இவர்கள் விருப்பாச்சியில் ஹைதர் அலியின் பாதுகாப்பில் தங்கியிருந்தனர். பின்னர் வேலுநாச்சியார், மருது பாண்டிய சகோதரர்கள் மீண்டும் சிவகங்கைக்கு வர நவாப்கள் அனுமதி அளித்தனர்.வேலுநாச்சியார் சிவகங்கையின் அரசியான பின், சின்னமருது அமைச்சராகவும், வெள்ளைமருது படை தளபதியாகவும் நியமிக்கப்பட்டனர். 1780ம் ஆண்டு வேலுநாச்சியார் ஆட்சியை மருது சகோதரர்களிடம் ஒப்படைத்தார். சில ஆண்டுகளில் அவர் மரணமடைந்தார். மருது சகோதரர்கள் வேல் கம்புகளையே ஆயுதமாக கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்த 12 ஆயிரம் வீரர்களை கொண்டு நவாப்களின் இடத்தை சூறையாடினர். இதனால் 1789ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கொல்லங்குடி நோக்கி படையெடுத்தனர். இந்த தாக்குதலை மருது சகோதரர்கள் முறியடித்து வெற்றி பெற்றனர். மருது சகோதரர்கள் பாளையங்கோட்டை மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் நல்ல நட்பு வைத்திருந்தனர். கயத்தாறில் கட்டபொம்மனை தூக்கிலிட்ட பின் அவரது சகோதரர் ஊமைத்துரைக்கு இவர்கள் அடைக்கலம் அளித்தனர். இதன் காரணமாக கோபமடைந்த ஆங்கிலேயர்கள் சிவகங்கை மீது படையெடுத்தனர். இதில் மருது சகோதரர்கள் தோல்வியடைந்தனர்,. 1801ம் ஆண்டு மருது சகோதரர்கள் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டார்கள்.மருது சகோதரர்கள் சிறந்த வீரர்கள் மட்டுமல்ல, சிறந்த நிர்வாகிகளும் ஆவர். 1783ம் ஆண்டு முதல் 1801ம் ஆண்டு வரை மக்களின் நலனுக்காக பாடுபட்டுள்ளனர். காளையார் கோவில், ஊரணிகள் போன்றவை இவர்களால் அமைக்கப்பட்டதாகும். இறுதியாக சிவகங்கையை கார்த்திகேய வெங்கடாசலபதி ராஜா ஆண்டுள்ளார். இவர் 1986ம் ஆண்டு காலமானார். இவரது மகள் மதுராந்தகி நாச்சியார் இன்று சிவகங்கை எஸ்டேட், சிவகங்கை தேவஸ்தானம், சத்திரம் போன்றவற்றை நிர்வகித்து வருகிறார்.