சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ரஞ்சித் (13). இவரின் தந்தை திருநாவுக்கரசு. தாய் சாந்தி. சிறு வயதில் இருந்தே ஓவியம், பேச்சு, நாடகம், கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வம் கொண்டவர். சிறுவயதிலேயே ஆள் ரவுண்டராகத் திகழும் இவர், பள்ளியில் மட்டுமல்ல வெளியிடங்களில் நடக்கும் விழாக்களிலும் இவரது கணீர் பேச்சு பார்வையாளர்களைக் கவரும். மாவட்ட, மண்டல, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு சான்றிதழ்கள் பதக்கங்களை வாங்கி குவித்து வருகிறார். திருச்சி அண்ணா கோளரங்கம் மற்றும் தமிழக அரசின் தமிழ்நாடு அறிவியல் மையம் நடத்தும் விநாடி வினா, ஓவிய போட்டிகள், கணித போட்டிகள், தமிழக மின்சார வாரியத்தின் திருச்சி மண்டல அளவிலான ஓவியப் போட்டிகள், பல ஆன்மிக குழுக்கள், விழா கழகங்கள், சேக்கிழார் விழா குழு, கந்தசஷ்டி விழா கழகம், தமிழ் சங்கங்கள், பல் சமய உரையாடல், பணிக்குழு, பேச்சுப் போட்டிகள், இந்து சமய அறநிலைய நடத்தும் பாவை விழா, சனாதன தர்ம மடலாயம், புத்தகத் திருவிழாக்கள் ஆகியவை நிகழ்த்தும் பேச்சு போட்டிகள் மற்றும் ஓவிய போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறார்.
மேலும் பத்திரிகை துறைகள் நடத்துகிற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்று வந்துள்ளது. இவரது தனி சிறப்பு. மத்திய அரசின் ஆற்றல் சேமிப்பு, எரிசக்தி துறை, மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்துகிற மழை நீர் சேமிப்பு பற்றிய விழிப்பு உணர்வு ஓவிய போட்டிகள், ஆயுள் காப்பீட்டு கழகம் நடத்தும் ஓவிய போட்டிகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு பாராட்டும் மெடலும், சான்றிதழ்களும் குவித்து வருகிறார். தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் பல நூல்களையும் படித்து இளம் வயதிலேயே ஆன்மிக பாடல்களையும் அறிந்து வருகிறார். பாடல்களைத் திறம்பட ஒப்புவிக்கும் ஆற்றல் மிக்கவர். பல்வேறு போட்டிகளில் பரிசு, பதக்கம் சான்றிதழ்கள் பெற்றிருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று 42 சான்றிதழ்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த மாணவனை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முதல் வகுப்பு ஆசிரியர்கள் வரைக்கும் பாராட்டி வருகின்றனர்.