சினிமா வேண்டாம் என காரைக்குடிக்குத் திரும்பிய மகேந்திரனை மீண்டும் அழைத்து வந்தது எம்.ஜி.ஆர்!

0
1726

காரைக்குடி கோட்டையூரை அடுத்த கண்டனூர்தான் இயக்குநர் மகேந்திரனின் சொந்த ஊர். கண்டனூர் மெயின் ரோட்டிலேயே இருக்கிறது அவரின் வீடு. அழகப்பா கல்லூரியில்தான் படித்தார்.மகேந்திரனின் இயற்பெயர் தேவ.அலெக்சாண்டர். அப்பா, ஜோசப் செல்லையா. அம்மா, மனோன்மணி!. மகேந்திரனின் மனைவி ஜாஸ்மின். ஜான் ரோஷன், டிம்பிள் ப்ரிதம், அனுரிட்டா ப்ரிதம் என மூன்று குழந்தைகள். பள்ளி, கல்லூரி காலங்களில் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஸ்டேட் ரேங்க்கில் வந்தவர். கல்லூரியில் சீனியர் விளையாட்டு வீரராக ஜொலித்த எல்.ஜி.மகேந்திரனால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே சூடிக்கொண்டார்!. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர் மீடியட். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.ஏ., பொருளியல் படித்தவர். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஏழு மாதங்கள் பயின்றவர், பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து விலகினார்!அழகப்பா கல்லூரி விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆர். முன் மகேந்திரன் பேசிய பேச்சு மிகப் பிரபலம். மேடையிலேயே எம்.ஜி.ஆர் எழுதிக் கொடுத்த பாராட்டு வரிகள், மகேந்திரன் வீட்டின்முகப்பை இன்னும் அலங்கரிக்கின்றன! எம்.ஜி.ஆர் தந்த உற்சாகத்தினால்,’காஞ்சித் தலைவன்’ படத்தில் உதவி இயக்கு நராகப் பணிபுரிந்தார். எம்.ஜி.ஆருக்காக மகேந்திரன் எழுதிய ‘அனாதைகள்’ என்ற நாடகம், பிற்பாடு ‘வாழ்வே வா’ என எம்.ஜி.ஆர் – சாவித்திரி நடிக்க ஆரம்பிக்கப்பட்டு, பொருளா தார நெருக்கடியில் கைவிடப்பட்டது! ஏறத்தாழ 25 படங்களுக்குக் கதை- வசனம் எழுதியிருக்கிறார். அவரின் நாடகம் ‘தங்கப் பதக்கம்’ நிறையத் தடவைகள் மேடை ஏற்றப்பட்டு, வெற்றிகரமாகத் திரை வடிவத்திலும் வந்தது!

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, மெட்டி, கை கொடுக்கும் கை, நண்டு, அழகிய கண்ணே, ஊர்ப் பஞ்சாயத்து, கண்ணுக்கு மை எழுது, சாசனம் என்பவை மகேந்திரன் இயக்கிய சில முக்கிய படங்கள்!. மகேந்திரனின் எல்லாப் படங்களுமே அதிக பட்சம் 40 நாட்களில் எடுக்கப்பட்டவைதான். ‘உதிரிப்பூக்கள்’ 35 ரோல் ஃபிலிம் சுருள்களில், 30 நாட்களில் படமாக்கப்பட்டது! ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் மூன்று தேசிய விருதுகள் வென்றன. விருது வாங்கப் போன மகேந்திரன், அங்கே வந்திருந்த எம்.ஜி.ஆரிடம் விருதுகளைச் சமர்ப்பித்து, ‘எல்லாம் உங்களால் வந்தது’ என்றார்! சிவாஜி எப்போதும் ‘மகேன்’ என்றுதான் செல்லமாகக் கூப்பிடுவார். எம்.ஜி.ஆர் ‘என் னங்க, என்னங்க’ என்றுதான் சொல்வார். ‘தங்கப்பதக்கம்’ நாடகம் மிகப்பெரிய வெற்றி அடைந்த போது, அதைப் படமாக்க முடிவு செய்தார் சிவாஜி. அப்போது சிவாஜிக்கும் மகேந்திரனுக்கும் அப்படியொரு அன்பும் பிணைப்பும் ஏற்பட்டது. குறிப்பாக, பக்கம்பக்கமாக வசனங்கள் பேசி, சிவாஜியின் நடிப்புக்குத் தீனி கொடுக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் சின்னச் சின்ன வசனங்கள் மூலம் சிவாஜியை இன்னும் சிறப்பான நடிப்பை வழங்கச் செய்திருப்பார். ‘அட…’ என்று இயக்குநர் பி.மாதவன் உட்பட எல்லோருமே பாராட்டினார்கள்.

எம்ஜிஆரால் அழைத்து வரப்பட்டாலும் சிவாஜியின் தங்கப்பதக்கம் மிகப்பெரிய உயரத்தை மகேந்திரனுக்கு கொடுத்தது. இதன் பின்னர், ரிஷிமூலம் முதலான படங்களுக்கும் ஆடுபுலி ஆட்டம், காளி முதலான படங்களுக்கும் கதை திரைக்கதை வசனம் என எழுதிவந்தார்.இந்தப் பக்கம் எம்ஜிஆர், அந்தப் பக்கம் சிவாஜி என இருவருடனும் நெருக்கமாகவும் அணுக்கமாகவும் இருந்தாலும், ஹீரோ ஃபார்முலாக்களையெல்லாம் புறந்தள்ளி, யதார்த்த சினிமாவை, சினிமாவுக்குள் கொண்டுவந்த சாகாவரம் பெற்ற மகாகலைஞனாகத் திகழ்கிறார் இயக்குநர் மகேந்திரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here