கீழடி அருகே 2 ஆயிரம் ஆண்டு பழமையான உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது. 4 கட்டங்களாக நடந்த ஆய்வில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் கீழடியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள், நகரங்கள் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 2 நாட்களுக்கு முன்பு கீழடி அருகே அட்டையடி கண்மாயில் பழமையான உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது.தற்போது கீழடி அருகேயுள்ள லாடனேந்தல் கண்மாயில் பழமையான உறைகிணறு கண்டறியப்பட்டது. லாடனேந்தலில் இருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் ரயில்வே சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது. இதற்காக இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது நேற்று முன்தினம் இந்த உறைகிணறு தென்பட்டது. தகவலறிந்ததும் தொல்லியல் துறையினர் உறைகிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், ‘‘லாடனேந்தலில் கண்டெடுக்கப்பட்ட உறைகிணறு 2 ஆயிரம் ஆண்டு பழமையானது. இயந்திரம் தோண்டும்போது உறைகிணற்றின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. மேலும் சேதமடையாமல் இருக்க மாற்றுவழியில் பணிகள் நடக்க ஏற்பாடு செய்துள்ளோம்,’’ என்றனர்.