திருப்பாசேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்டோர் டூவீலரில் வந்து, பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிகளைச் சூறையாடியுள்ளார்கள். 8 பேருக்கு அறிவாள் வெட்டு ஏற்பட்டது. இதில், ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒருவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிசிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்கள், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.மாற்று சாதியினர் இருக்கக்கூடிய ஆவாரங்காடு, தஞ்சாக்கூர் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். பிரச்னை குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது, ”மாற்று சாதியினர் எங்களைக் கொத்தடிமைகளாகப் பயன்படுத்துகிறார்கள். எங்களை ஊரைவிட்டு விரட்டியடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். எங்க பசங்க டீ கடையில் உட்கார்ந்து கால்மேல் கால்போட்டு டீ குடித்திருக்கிறார்கள். அப்போது, மாற்று சாதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் அருண், அந்த வழியாக வந்திருக்கிறார். ஏண்டா நான் வர்றேன் கால்மேல கால்போட்டு உட்காந்திருக்கேனு சொல்லி பிரச்னை செய்திருக்கிறார்கள். அடுத்ததா கோயில் சாமி கும்பிடுவதில் பிரச்னை. இப்படியாகத் தொடர்ந்து பிரச்னைகள் செய்துவருகிறார்கள். நாங்கள் எப்படி இந்த ஊரில் வாழ்வது என்றே தெரியவில்லை. இரண்டு உயிரை இன்று இழந்திருக்கிறோம்” என்கிறார்கள்.