சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முதல் மதுரை மாவட்டம் மேலூர் வரை அமைய உள்ள நான்குவழிச்சாலையால் (என்எச் 210) காரைக்குடி அருகே பாதரக்குடி தெற்கு குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் இடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.காரைக்குடியில் இருந்து மேலூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக நில அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. காரைக்குடி அருகே பாதரக்குடி புதுக்கண்மாய் வழியாகவும் தெற்குக் குடியிருப்பு வழியாகவும் சாலை அமைக்க அளவீடு கற்கள் நட்டுள்ளனர். இதில் தெற்குக் குடியிருப்புப் பகுதியில் 400 ஆண்டுகளுக்கு மேலாக 130க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.இச்சாலையால் ஊரில் உள்ள அனைத்து வீடுகளும் இடிக்கப்படும் நிலை உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 130 வீடுகளில் வசிக்கும் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இதில் ஒருவருக்கு பாதிப்பு என்றாலும் அனைவருக்கும் ஏற்பட்டது போலத்தான். சாலை அகலப்படுத்துவதாக கூறி திடீர் என கல் நட்டனர். அதன்பிறகுதான் எங்களுக்குத் தெரியவந்தது. ஊரை அழித்துச் சாலை போட முயற்சிக்கின்றனர். சாலை அமைக்க கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தியதாகக் கூறுகின்றனர். இதுகுறித்த எந்த விவரமும் எங்களுக்கு தெரியாது. சாலை அமைவதை நாங்கள் எதிர்க்கவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை அழித்துத்தான் சாலை அமைக்க வேண்டும் என்பது கிடையாது. இதுகுறித்து தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கேஆர்.பெரியகருப்பனிடம் மனு அளித்துள்ளோம்.
மக்களைப் பாதிக்காத வகையில் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். கூலி வேலைபார்த்து கடன் வா ங்கி வீடு கட்டி உள்ளோம். சாலை அமையவுள்ளதால் வீடுகளை இடித்து விடுவார்கள் என கூறுகின்றனர். நாங்கள் எங்கே போவது? ஊரோடு தற்கொலை செய்து கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. எங்களை அழித்து விட்டு யாரு க்கு சாலை போடுகின்றனர் எனத் தெரியவில்லை. குருவி போல சிறுகச் சிறுக பணம் சேர்த்துத் கட்டிய வீட்டை உடைப்பதாகக் கூறுகின்றனர். இதற்கு நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம். கல் நட்டதில் இருந்து நாங்கள் யாரும் நிம்மதியாக தூங்கவில்லை, சாப்பிடக்கூட இல்லை. பயத்துடனே உள்ளோம். குடியிருப்புப் பகுதி வழியாகச் செல்லாமல் மாற்று வழியை ஆய்வு செய்யலாம். அருகே உள்ள காட்டுப்பகுதி வழியாக சாலை அமைக்கலாம். அளக்கும்போதே சிலர் வீடுகளின் மேலே ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறினர். அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து வந்தோம். அதிகாரிகள் இழப்பீடு தருவதாகக் கூறுகின்றனர். இருப்பதை அழித்து விட்டு இழப்பீடு எதற்கு?