“சீனி, பால் போன்ற விலை உயர்வால் நாளை முதல் டீ விலை ரூ.12, 15 என உயர்த்தப்பட இருக்கிறது. அன்பார்ந்த வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு உரிமையாளர்” என்று ஒவ்வொரு டீ கடை முகப்பிலும் விலை உயர்வுக்கான பட்டியல் `மெடல்’ போன்று தொங்கவிடப்பட்டிருக்கும் நிலையில் சிவகங்கை நேருபஜாரில் ஐந்து ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார் நைனாமுகம்மது.
சிவகங்கை அரண்மனை ஓரமாக நேரு பஜார் பிரிகிறது. இந்த பஜாரில் நூற்றுக்கும் மேற்பட்ட மளிகைக்கடைகள், காய்கறிக்கடைகள் இயங்கி வருகிறது. இதே பஜாரில் மற்ற டீக்கடைகளும் இருக்கின்றன. ஆனால், வியாபாரிகள் பொதுமக்கள் கட்டட தொழிலாளிகள் முதியவர்கள் எல்லாம் டீ கடை திறக்கும் முன்பே நைனாமுகம்மது வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.
அதிகாலை 5 மணிக்குக் கடை திறந்து 10 மணிக்கு மூடி விடுகிறார். அதன் பிறகு மாலை 4 மணிக்குத் திறந்து 6 மணிக்கு முடித்து விடுகிறார் நைனாமுகமது. மாலை 4 மணிக்கு டீக்கடை திறக்கும் நேரம் என்பதால் நாம் முன்கூட்டியே சென்றுவிட்டோம். முதியவர்கள் கூட்டம் காத்துக் கிடந்தது. பக்கத்திலேயே டீக்கடை இருக்கிறது.
அங்கு செல்லாமல் இங்கே வந்து காத்துக்கிடக்கிறீங்களேனு கேட்டோம். “இங்கே ஐந்து ரூபாய்க்குச் சுவையான டீ கொடுக்கிறார் நைனாமுகமது. நல்ல பையன் கடைக்கு வருகிறவர்களிடம் அன்பாகப் பேசுவார்” என்று நன்னடத்தை சான்று கொடுத்தார்கள் அந்த முதியவர்கள்.
அஞ்சு ரூபாய் டீ கடையின் உரிமையாளர் நைனாமுகமதுவிடம் பேசினோம். “கடந்த 40 ஆண்டுகளாக எங்கள் டீ கடை இயங்கி வருகிறது. என் அப்பா காலத்தில் பத்து பைசா இருபது பைசாவுக்கு டீ விற்பனை செய்தோம். தற்போது நான் 5 ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறேன்.
என்னை மற்ற டீ கடைக்காரர்கள் சத்தம் போடுகிறார்கள். இருந்தாலும் எனக்குக் கட்டுப்படியாகிறது. நான் 5 ரூபாய்க்குதான் டீ விற்பனை செய்வேன் என்று சொல்லிவிட்டேன். இந்த 5 ரூபாயில் எனக்கு லாபம் இருக்கிறது” என்கிறார்.
வாழ்த்துக்கள் நண்பரே
தங்கள் தலையாய சமூக சேவைக்கு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்